Friday, October 31, 2008

இறைவனின் திருவிளையாடலா?

இறைவனால் உருவாகி இன்றுவரை இருக்கும் இணையில்லா இவ்வுலகில் சுகபோக வாழ்க்கைக்கு சொந்தக்காரராக சொற்பபேர் சுகமுடன் சுகித்திருக்கும்போதிலும் அனேக அன்பர்கள் அல்லல்களால் ஆட்கொள்ளப்பட்டு அரைவயிறு அன்னம் இல்லாமல் அன்றாடம் அவதிப்படுவதை அவசியம் அறிந்திருப்போம்!
.
சமாதானத்தையும் சாந்தியையும் இழந்து, சாவை எதிர்நோக்கி, வாழ்வே சுமையாகி, வாடி வதைபடுவதையும்
துன்பத்திலும் துக்கத்திலும் துயரமான நோவிலும் அகப்பட்டு, எப்போது வரும் மரணமென்று
ஏங்கும் கூட்டம் எந்நாளும் உண்டு என்பதை ஏற்றே ஆகவேண்டும்!
.
சமீப காலங்களில் சகஜமாகிவிட்ட குண்டுவெடிப்பு, பொல்லாத போர் போன்ற செயற்கை சீரழிவுகளும், பூமியை புரட்டும் பூகம்பத்தோடு சுனாமி, சூறாவளி போன்ற இயற்க்கை சீரழிவுகளும், அவ்வப்பொழுது அவனியை தாக்கி மானிடர்களை மந்தை மந்தையாக மண்ணுக்குள் அனுப்புவதோடு, அநேகரை அரை மனிதராக்கி கை கால்கள் கால்களை காவு வாங்கி வாழ்க்கையை வழிமாற வைத்துபோவது வழக்கமாகிவிட்டது!
.
மனித வாழ்க்கைதான் மணமிழந்து போனது என்றால் விலங்குகளின் வாழ்க்கையில் வேறுவித சோகம்!
.
துள்ளி ஓடும் மானை துரத்தி பிடித்து உயிரோடுவைத்து உடம்பையே உரித்து
சிறுத்தைகள் சேர்ந்து சிறிது சிறிதாய் கொன்று பசியடக்க பங்கிட்டு பக்கம் ஒன்றாய் கடிக்கும்போது ஐயோ ஆண்டவா!ஏன் இப்படி என்று என்னுள் பதறுகிறேன்!
.
கன்றாக இருக்கும் காட்டெருமையை கண்முன்னே கடித்து அம்மா என்று அலரவிடாமல் அடித்து கொல்லும் சிங்கத்தை சலனமற்று பார்த்து, அழத்தேரியாமல் ஏங்கும் அன்னையின் நிலை என்னை தவிக்க வைக்கிறது!
.
உயிரோடுள்ள ஆட்டை உடம்பை ஒருவர் பிடிக்க தலையை ஒருவர் தயக்க்மிற்றி பிடிக்க குரல்வளையை அறுக்கும் போது, குற்றுயிராய் துடிக்கும் அந்தஇடத்தில் அடியேன் இருந்தால் என்னிலைமை எப்படிஇருக்குமென்று கற்ப்பனைபண்ணி கதறுகிறேன்
ஆம்!

அதுவும் ஒரு ஆண்டவரின் படைப்புதானே! ஆடு அலறும் அறியாத பாஷை அவர்களுக்கு புரிவதில்லை "ஐயோ என்னை விட்டுவிடுங்களேன்" என்று அலறினாலும் சத்தம் போட்டு கதறினாலும் நமக்கு கேட்பது ம்மே.....ம்மே..... தான் அதுவும் அக்கம் பக்கம் கேட்டுவிடாதபடி
அருத்துவிடுவோம் அதன் கழுத்தை!
.

எங்கெங்கிலும் தினம் நடக்கும் எல்லையில்லா கொடூரங்களை நித்தம் நித்தம் பார்த்து செத்து செத்து பிழைக்கும் மக்கள் கூட்டத்தையும், சாவதர்க்கென்றே பிறக்கும் சகலவித உயிரினங்களையும் சற்றுநேரம் நினைத்தால் நெஞ்செல்லாம் நெகிழ்கிறதே! கண்கள் கண்ணீர் சொரிகிறதே!!
.
இறைவனால் படைக்கப்பட்ட எனக்கே இத்தனை இரக்கம் இருக்குமானால்
என்னையே படைத்த இறைவன் எத்தனை இரக்கம் உள்ளவராக இருப்பாரென்று சிறிதேனும் சிந்திக்காமல், இதற்க்கெல்லாம் காரணம்
இறைவனே தானென்றும் கருணையின் கடலான அன்பின் உருவான அவரின் திருவிளையாடலென்றும் அறியாமல் இயம்பும் ஆன்மீக அன்பர்களே!
இறைவன் இப்படியா விளையாடி இன்பம் ஈட்டிக்கொண்டு இருக்கிறார்? அல்லது இப்படிப்பட்டவரை இறைவன் என்று இயம்புவதுதான் இவ்வுலகுக்கு தகுமா?
.
இல்லவே இல்லை!
.
ஆண்டவரை அறியாதவர் அகம்பும் அர்த்தமற்ற அறிவுரைகள் அவை. பொல்லாங்கினால் யாரையும் சோதிக்க விரும்பாத பொன்னான தேவனை, போற்ற விரும்பாத பொல்லாதோர் பிதற்றும் போக்கற்ற யோசனைகள் அவை!

இன்னல்களுக்கு காரணம் இறைவன் இல்லையென்றால் இத்தனைக்கும் காரணம் என்ன? என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் இங்கு எழலாம்!
ஆதியிலிருந்தே ஆண்டவருக்கு இணையாக தோன்றி ஆண்டவருக்கு அடங்காமல் ஆதியிலே அகன்றுபோய் அடியோடு அழியப்போகும் அசுத்த ஆவிகளே அத்தனைக்கும் காரணம்! இன்றுவரை இறைவனோடு இரக்கமின்றி போராடி அக்கினிக்கடலில் அமிளப்போகும் அடங்காத சாத்தானே அத்தனைக்கும் காரணம்!
சாத்தானின் சகதிகளைவிட்டு சடுதியாய் அகலவும் சர்வ வல்லவரை சரிவர அறியவும் வீழ்ந்துபோன மனிதனுக்கு விலையில்லா அறிவை ஆண்டவர் அளித்தார்! அந்த அறிவே அகங்காரமாகி ஆண்டவரைவிட்டு அகன்று தீமையின் பிடியில் சிக்கி, தன்இனத்தை தானே தாக்கி தினம்தோறும் அழிகிறான் குண்டு வைத்து குற்றுயிராக்குகிறான்!
எவர் எப்படி போனாலென்ன எனக்கில்லை ஏதொரு கவலையென்று என்னால் ஓதுங்கி ஓட முடியவில்லையெனவே எல்லா கொடூரங்களுக்கும் ஏற்ற்பான முடிவுவர எதாகிலும் வழி உண்டோவென்று என் தேவனை நோக்கி எந்நாளும் அழுது புலம்புகிறேன்!

எவரும் இறைவனென்று இங்கில்லை என்று வாழ்ந்தத காலம் வரை, எப்படியோ தோன்றிய உலகத்தில் எங்கேயோ கோளாறாகிப்போனதால் எல்லாமே எப்படியோ நடக்கிறது என்றெண்ணி எல்லாவற்றிக்கும் முடிவுண்டென்ற எண்ணமற்றிருந்தேன்! ஆனால் என்றொரு நாள் சாத்தானின் கிரியையை அழிக்க சர்வ வல்லவர் வந்தாரென்றும் பாவத்தில் இருந்து மீட்க பரிசுத்தர் வந்தாரென்றும் அறிந்து கொண்டேனோ அன்று தீமைக்கெல்லாம் தீர்வு தீர்க்கமாய் உண்டென்றும், துயரத்துக்கும் துன்பத்துக்கும் முடிவு தூரத்தில் இல்லையென்றும் அறிந்துகொண்டேன்,
.

உலகத்தின் உயிரினத்தை உள்ளிருந்தே கூறுபோட்டு, சமாதானத்தையெல்லாம் சடுதியில் கெடுத்து மனிதனின் மாட்சிமையை மரணத்தால் அழித்து விலங்குகளுக்குள்லெல்லாம் விரோதத்தை விதைத்து இறைவனின் படைப்பை இன்னலால் அழித்து படைப்புகளையெல்லாம் பாழாக்கி பங்கம் விளைவிக்கும் பயங்கரப்பேய் என்று ஒழியுமென்று எந்நாளும் ஏங்குகிறேன்!

சிங்கம் மாட்டை போல வைக்கோல் தின்னுமந்த சீரி நாளை சிக்கிரம் காண ஏங்குகிறேன்! ஆம் அந்த நாள் நிச்சயம் உண்டு, அது மிக சமீபமே!

Friday, October 17, 2008

சுடர்மிகு அறிவுடன் மனிதன் படைக்கப்பட்டதன் காரணம்!

ஆதியிலேயே இருந்து உலகை சீரழித்து வரும் அசுத்த சக்திகளை ஆராய்ந்து பார்த்து விலக்கவே, விலகி இருக்கவே மனிதனுக்கு அதீத அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை கோட்டை விட்டு விட்டு இன்று பயனற்ற எதெதையோ மனிதர்கள் ஆராய்ந்துகொண்டு செய்துகொண்டு இருக்கின்றனர்.
.
மனிதன் மிக நேர்த்தியாக மிக உயர்ந்த தொழில் நுபத்தோடு கணினியை உருவாக்கியுள்ளான். அதன் பயன்பாடுகள் ஏராளம் ஏராளம் ஆனால் வெப்பத்தை வெளியேற்ற வைத்திருக்கும் துளைகள் வழியாக காற்றில் பறக்கும் சாதரண தூசி புகுந்து அதன் செயல்பாட்டை பல நேரங்களில் கெடுத்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே!
இப்பொழுது
.
தூசி கெடுத்துவிடும் என்று எண்ணி கணினியை யாரும் உருவாக்காமல் இருப்பார்களா?
தூசு என்றுமே கெடுக்காத கணினியை உருவாக்க முடியுமா?
இரண்டுமே சாத்தியம் இல்லை!
.
அதே நேரத்தில் தூசு கெடுக்கும் அளவுக்கு ஒரு கணினியை உருவாக்குவது மனிதனின் குற்றமும் அல்ல. ஒரு வேளை தூசு கெடுத்தால் சுத்தம் பண்ணி சரிசெய்து கொள்ளலாம் என்று நோக்கில்தான் அதன் பயன்பாட்டை கருதி கணினியை உருவாக்குகிறார்கள்
.
இது அப்படியே மனிதனுக்கு பொருந்தும்!
இறைவன் தனது வல்லமையால், இன்பத்தால் நிறைத்த இந்த உலகத்தை படைத்து பேரின்பத்தில் திளைத்திருக்கும்படி அவன் கண்களுக்கு வாய்க்கு செவிக்கு மற்றும் உடலுக்கு இன்பமானது எல்லாவற்றையும் படைத்து அவனுக்கு ஏற்றாப்போல் துணையையும் படைத்து மனிதன் எல்லையற்ற இன்பத்தை என்றும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார் (நாம் இப்பொழுது அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் அவர் படைக்கும்போது இருந்த இன்பத்துக்கும் கொஞ்சமும் நிகர் இல்லை)
.
அந்த இன்பத்தை கெடுக்க ஆதியில் இருந்தே தானாக தோன்றி இருக்கும் அசுத்த சக்திகள் என்னும் தூசி நிச்சயம் வரும் என்பது இறைவனுக்கு தெரியும். ஆகினும் அந்த அசுத்த சக்திக்கு பயந்து ஒன்றையும் படைக்காமல் இருப்பதை விட, அசுத்தத்தை அறிந்து விலகி இருக்கும்படி அதீத ஞானத்தை மனிதனுக்கு கொடுத்தார்! ஆனால் மனிதன் அந்த ஞானத்தை பயன்படுத்தி தீமையை விலக்காமல் தீமைக்குள் மாட்டிக்கொண்டான். அதனால் வந்த பிரச்சனைகளே இன்று உலகில் நடக்கும் கொடூரங்கள்.
இங்கு குற்றம் யாருடையது?
.
இன்பமாக மனிதன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதனை படைத்தது இறைவன் குற்றமா?
அல்லது
தீமையை பகுத்தறியும் அறிவை சரிவர பயன்படுத்தாமல் தீமைக்குள் விழுந்தது மனிதன் குற்றமா?
.
தான் எல்லாவற்றையும் கோட்டை விட்டுவிட்டு கருணை கடலாம் அன்பின் சொரூபமாம் இறைவன்தான் அத்தனையும் செய்து விளையாடுகிறார் என்று பலர் தவறாக கருதுகின்றனர் அதற்க்கு மேலும் பலர் சிந்தித்து கண்ணை படைத்த இறைவனுக்கே கண் இருக்கிறதா என்றும் இறைவனே இல்லை என்றும் கருதுகின்றனர்.
.
சரி! இப்படி ஒரு மனிதனை படைத்தது இறைவனின் தவறு என்றே வைத்துக்கொண்டாலும், தீமைக்குள் விழுந்த மனிதனை இறைவன் அப்படியே விட்டுவிடவில்லை. அவனை மீட்க வந்தார் ஆனால் மனிதன் அவர் அழைப்புக்கு செவி கொடாமல் இன்னும் அதிக அதிகமாக விலகி அவர் கண்காணாமல் தங்க எதாவது இடம் கிடைக்குமா என்றுதான் ஆராய்கிரானே தவிர அவர் பாதுகாப்பின் கரத்துக்குள் வர விருப்பம் இல்லையே! பாதுகாப்புக்காக கொடுகாப்பட்ட அறிவே இன்று பாதை மாற காரணமாக உள்ளது!
.
கணினி ஒரு ஜடப்பொருளாக இருப்பதால் அதை எப்படி தூக்கி போட்டு சுத்தம் செய்தாலும் அது மறுப்பு தெரிவிப்பது இல்லை ஆனால் இங்கு அறிவுள்ள மனிதன் தானும் தன்னை சுத்தம் செய்ய மாட்டான் பிறர் சுத்தம் செய்ய வந்தாலும் விட மாட்டான். தன்னில் உள்ள அழுக்கு தெரியாமல், நான் சுத்தமாகத்தான் என்னை யாரும் சுத்தம் செய்ய தேவை இல்லை என்று சுருக்கமாக கூறிவிடுகிறான் எதற்கோ கொடுக்கப்பட்ட அறிவை வைத்து என்னென்னவோ பயனற்றதை செய்துகொண்டு இருக்கிறான்
.
அசுத்த சக்திகளானது இரக்கம் என்பதே இல்லாத கொடூரமான ஒன்றாக இருப்பதால் அதன் பிடியில் இருக்கும் மனிதர்கள் கொடூரமாக வதைக்கப்படுகின்றனர். அதை அறிந்த இறைவன், நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டேன் நீதான் அதில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கதறுகிறார். எனவே சிலர் சொல்வதுபோல் இங்கு நடக்கும் துன்பங்களுக்கு எல்லாம் இறைவனே காரணம் என்று இறைவனை குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை!
.
அப்படியே இறைவனை குறை கூறிக்கொண்டு இருந்தாலும் அதனால் என்ன பயன்? விபத்தில் மாட்டப்போகும் ஒருவர், யார் குற்றம் என்று ஆராய்ந்து கொண்டு இருப்தை விட தப்பிக்க வழி தேடுவதுதனே புத்திசாலித்தனம்?
எனவே பாவத்தில் இருந்து நம்மை விடுவித்து பரிசுத்தப்படுத்தும்
.
இறைவனின் திருவடிக்குள் சரண் அடைவதை தவிர, நமது மீட்புக்கு வேறு வழி இல்லை!